Published : 08 Aug 2022 03:32 PM
Last Updated : 08 Aug 2022 03:32 PM

ஆக.22-க்கு பதிலாக ஆக.25-ல் தொடக்கம்: பொறியியல் கலந்தாய்வு அக்.21 வரை நீட்டிப்பு

சென்னை: இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆக.22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆக.25-ம் தேதி தொடங்கி அக்.21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடந்துகொண்டிருக்கிற கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தோம்.

இப்போது ஆக.22-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும்.

நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கெனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அந்த நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x