Published : 08 Aug 2022 11:57 AM
Last Updated : 08 Aug 2022 11:57 AM

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி 

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர்.

அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி சேர கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 1000 இடத்திற்கு 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் வெளியான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள் டாப் 10 பட்டியலில் மாநிலக் கல்லூரி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x