Published : 05 Aug 2022 06:36 AM
Last Updated : 05 Aug 2022 06:36 AM

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் `ராம்சர்' அங்கீகாரம் பெற்ற தலங்கள் 10 ஆக உயர்வு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ராமேசுவரம்: தமிழகத்தில் புதிதாக ஆறு சதுப்பு நிலங்களுக்கு ‘ராம்சர்’ இடங்களாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் `ராம்சர்' அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களிலிருந்து நிலப்பகுதியைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 02.02.1971 அன்று இரான் நாட்டின் ராம்சர் நகரில் முதல் சர்வதேச மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சென்று உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு `ராம்சர்' பிரகடனம் என்று பெயர். ராம்சரில் இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவில் 49 சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்ட `ராம்சர்' இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் கோடியக்கரையும் இதில் அடக்கம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக இந்தியாவில் புதிதாக 26 சதுப்பு நிலங்களை `ராம்சர்' தலங்களாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழக அரசின் சார்பாக 13 சதுப்பு நிலங்களின் முன்மொழிவும் அடக்கம்.

கடந்த ஜூலை 26 அன்று முதற்கட்டமாக தமிழகத்தின் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு, மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியன இந்தியாவின் `ராம்சர்' இடங்களாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இந்தியாவில் மேலும் 10 சதுப்பு நிலங்களுக்கு `ராம்சர்' அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம், கூந்தன்குளம், வேம்பனூர் சதுப்பு நிலம், வெள்ளோடை, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 இடங்களும், ஒடிசாவில் உள்ள சட்கோசியா பள்ளத்தாக்கு, கோவாவில் உள்ள நந்தா ஏரி, கர்நாடகாவின் ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிர்பூர் சதுப்பு நிலம் ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டில் `ராம்சர்' அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆகவும் இந்தியாவில் 64 ஆகவும் உயர்ந்துள்ளன.

பிரதமர், முதல்வர் வாழ்த்து

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் மேலும் 10 சதுப்பு நிலங்கள் `ராம்சர்' தலங்களாக அங்கீகரிக்கப்பட்டதில் ஒவ்வொரு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இது நமது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மேலும் ஆழப்படுத்தும், என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் `ராம்சர்' ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x