Published : 15 Oct 2016 08:23 AM
Last Updated : 15 Oct 2016 08:23 AM
திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.18 கோடி பணத்துடன் மாயமான ஓட்டுநர் இசக்கி பாண்டியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி பணியாளர்கள், கடந்த 3-ம் தேதி தனியார் டிராவல்ஸ் நிறுவன வாகனத்தில் 2.29 கோடி ரூபாய் பணத்துடன் சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டனர். பல ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பிட்டு திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடிக்கு வந்தனர். அப்போது மற்றவர்கள் வேலையில் கவனமாக இருக்கும்போது வாகன ஓட்டுநர் இசக்கி பாண்டி மீதமிருந்த ரூ.1.18 கோடி ரொக்கத்துடன் தப்பினார். புலியம்பேடு பகுதியில் வானத்தை நிறுத்திவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு தென்மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடந்தது. மனைவி மற்றும் அவரது நண்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இசக்கி பாண்டி சரணடைந்தார்.
மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, 14-ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று அழைத்துவரப்பட்டு, குற்றவியல் நடுவர் மன்றம்-2-ல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருவேற்காடு காவல் நிலையத்துக்கு இசக்கிபாண்டி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு உண்மைகள் வெளியாகலாம் என தெரிகிறது. இதனிடையே, கடந்த 7-ம் தேதி சாத்தான்குளத்தில் உள்ள இசக்கி பாண்டியின் தங்கை கணவர் கனகராஜிடம் இருந்து ரூ.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT