Published : 03 Aug 2022 03:26 PM
Last Updated : 03 Aug 2022 03:26 PM

நம்மை காக்கும் 48 திட்டத்தில் 1 லட்சம் பேருக்கு ரூ.90.19 கோடி செலவில் சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நம்மை காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு ரூ.90.19 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 1 லட்சமாவது நபரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டமாகும். இது 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியினை வழங்குவதை உறுதி செய்வதாகும்.

இத்திட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சையானது இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை பெருமளவு குறைப்பதையும், விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குதல் மற்றும் நோயாளியின் தேவையற்ற இடமாற்றத்தை தவிர்ப்பதலையும் நோக்கமாக கொண்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 1 இலட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5000/- ஊக்கத் தொகை அரசால் வழங்கப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்படும் கிராமப்புறத்தினர், நகர்ப்புறத்தினர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் யாராக இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். சாலை பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, அதற்கு அருகாமையில் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் 445 மற்றும் அரசு மருத்துவமனைகள் 228 ஆக மொத்தம் 673 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு, உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் 18.12.2021 முதல் 02.08.2022 வரை ரூ.90.19 கோடி செலவில் 1,00,061 நபர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x