Last Updated : 02 Aug, 2022 06:12 PM

 

Published : 02 Aug 2022 06:12 PM
Last Updated : 02 Aug 2022 06:12 PM

“மகாராஷ்டிராவில் நடந்ததைப் போல தமிழகத்திலும் நடக்க வாய்ப்பு” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ | கோப்புப் படம்

கோவை: “கட்சியின் தலைவர்கள் ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ளாவிட்டால், மகாராஷ்டிராவில் நடந்ததைப்போல தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எம்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆக.2) செய்தியாளர்களை சந்திந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியது: "75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கோவை கெம்பனூரை அடுத்த அட்டுக்கல் கிராமத்தில் செயல்பட்ட ஆதரவற்றவர்களுக்காக இல்ல பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மனிதக் கடத்தல் நிறுவனத்துக்கு மறைமுகமாக திமுக நிர்வாகிகள் உதவுகிறார்கள். எனவே, அந்நிறுவனத்தை நடத்துபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று கூறினார்.

பாஜக நிர்வாகி சார்பில் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் 'தமிழகத்தில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' என்ற வாசகத்துடன் சதுரங்க காய்களை நகர்த்துவது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அந்த ஆட்டம் வேகமான ஆட்டமா, மெதுவான ஆட்டமா என இனிவரும் காலங்களில் பார்க்கலாம். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் நடந்த விஷயம் பாஜக-வால் திட்டமிடப்பட்டு, வேண்டுமென்ற ஆசை காட்டி செய்யப்படவில்லை. கட்சியை நடத்தக் கூடியவர்கள், கட்சியின் தலைவர்கள் ஆகியோர் கட்சிக்காக வேலை செய்தவர்கள், கட்சியை வளர்த்தவர்களை புறந்தள்ளிவிட்டு தனது மகன், மருமகன், மனைவி என்று பொறுப்பு அளிக்கும்போது, அந்த கட்சியிலிருந்து நிர்வாகிகளே பாஜகவை தேடி வருகிறார்கள்.

அதற்கு எங்கள் மீது யாரும் குறைகூற வேண்டாம். கட்சியின் தலைவர்கள் ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ளாவிட்டால், மகாராஷ்டிராவில் நடந்ததைப்போல தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x