Published : 02 Aug 2022 09:40 AM
Last Updated : 02 Aug 2022 09:40 AM

ஆடிப்பெருக்கு: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் படித்துறைகளில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரிக் கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அன்றைய நாளில் விவசாயிகள், புதுமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் சிறப்பு வழிபாடு செய்து, காவிரித்தாயை வணங்குவர். இதன்படி இந்தாண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா நாளை (ஆக.3) கொண்டாடப்படுகிறது.

முன்னெச்சரிக்கை

இதற்கிடையே கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. எனவே, அவற்றின் கரைகளிலுள்ள படித்துறைகளுக்கு நடப்பாண்டு வழக்கத்தைவிட கூடுதலாக பொதுமக்கள் வருகைதந்து வழிபாடு நடத்தலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சிமாநகர காவல்துறை சார்பில் ரங்கம் அம்மா மண்டபம், சிந்தாமணிபடித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட இடங்களில் 550-க்கும்மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதவிர, புறநகர் பகுதிகளில் உள்ள முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஆமூர், குணசீலம், பனையபுரம், உத்தமர்சீலி, முசிறி சாந்தபாளையம், பரிசல்துறை, அய்யம்பாளையம், சீலைப்பிள்ளையார் புதூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள காவிரி படித்துறைகளிலும் அதிகளவில் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் கூடி வழிபாடு நடத்துவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் அங்கும் 450 போலீஸார் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல, காவிரிக் கரையில் அமைந்துள்ள முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், கம்பரசம்பேட்டை தடுப்பணை ஆகியவற்றிலும் ஏராளமானோர் கூடுவர் என்பதால், அங்கும் விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட காவல்துறைதிட்டமிட்டுள்ளது.

ஆறுகளில் நீர் அதிகமாக செல்வதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை, அம்மா மண்டபம் மற்றும் காவிரி படித்துறைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லைப் ஜாக்கெட், ரப்பர் படகு போன்றவற்றுடன் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சமயபுரம்மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், பஞ்சவர்ணசுவாமி கோயில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்டவற்றில் வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வருவர் என்பதால், அங்கும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x