Published : 21 Oct 2016 07:31 PM
Last Updated : 21 Oct 2016 07:31 PM

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு தேவை: வேல்முருகன்

பட்டாசு ஆலைகள், கிடங்குகளில் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சிவகாசி புறவழிச்சாலையில் இருந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அருகிலிருந்த மருத்துவ பரிசோதனை மையத்தில் சிகிச்சைக்கு வந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் துயரத்தை அளித்துள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலியானோர் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலும் இதே மாதிரியான விபத்து நடந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கடைகள், கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் சோதனையிட்டு தமிழக அரசு சீரமைக்க வேண்டும்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x