Published : 29 Jul 2022 10:29 PM
Last Updated : 29 Jul 2022 10:29 PM

சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறை: தமிழ்நாடு அரசுடன் இணைகிறது சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடியின் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், 'வடிவமைப்பு சிந்தனை' அணுகுமுறை ஒன்றை உருவாக்கி உள்ளது. இதனை சாலைப் பாதுகாப்பு தொடர்புடைய தமிழக அரசின் துறைகள் குறிப்பாக காவல்துறை அமல்படுத்த உள்ளது.

சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) தமிழக அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் சென்னை ஐஐடி -ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

இந்தக் கூட்டு முயற்சியின் வாயிலாக கீழ்கண்ட முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடப்பட்டுள்ளது:

  • அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம், சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல்.
  • பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை, ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல்.
  • அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச்சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல்
  • அமலாக்கத்திற்கான வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல்
  • செயலாக்க நடைமுறைகளில் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்ரீதியாக மதிப்பிடுதல்
  • போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குதல்

இந்தக் கூட்டாண்மையின் தொடக்கத்தில் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பேசுகையில், "இளம் மாணவர்களும், வருவாய் ஈட்டுவோரும் சாலை விபத்துகளில் உயிரிழப்பதால் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்படும் சமூக பொருளாதார சுமையைப் புரிந்து கொள்வது அவசியம். சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையைக் கடைபிடிப்பது அவசியமான ஒன்றாகும்" என்றார்.

இக்கூட்டு முயற்சி பற்றிப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, "சாலைப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கிய பணியில் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதில் சென்னை ஐஐடி-க்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு காவல்துறையின் வலுவான தொழில்நுட்ப மற்றும் கள அனுபவங்களையும், அவர்களிடம் உள்ள பெருமளவிலான தரவுகளையும் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புக்கான செயல்திட்டத்தை மிகக் குறுகிய காலத்திலேயே வடிவமைக்க முடியும்" என்றுத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி-ன் ஆக்கப்பூர்வத் திட்டத்தைப் பாராட்டிப் பேசிய தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநரும், சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவின் தலைவருமான வினித் வாங்கடே, "பாதுகாப்பான சாலைகளும் பாதுகாப்பான பயனர்களும் ஒன்றுக்கொன்று சீராக இருக்கும் போது தான் சாலைப் பாதுகாப்பும் வலுவாக இருக்கும். சாலைப் பயனரின் கல்வியுடன் அறிவியல் ரீதியான அமலாக்கம் இணைந்து பாதுகாப்பான பயனருக்கு உதவுகிறது. அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்ட பல்வேறு செயல்திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றில் எவற்றைப் பயன்படுத்தலாம், எவை வேண்டாம் என சரியான தொழில்நுட்பத்தின் அடிப்படையில், சரியான முறையில் செயல்படுத்த உள்ளோம்.

காவல்துறையினர் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட வேண்டும். நகரங்களில் போக்குவரத்துக்கு என தனிப்பிரிவுகள் இருந்தாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மாவட்டங்களைப் பொறுத்தவரை, குறைவான எண்ணிக்கையிலேயே காவலர்கள் உள்ளனர். எனவே சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களே, போக்குவரத்து செயல்பாட்டையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டும்.

காவலர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒரு நாளிலோ அல்லது மாதத்திலோ போலீசார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடிகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர சாலைப் பணிகளை கவனிக்கும் அமைப்புகளோடு இணைந்து குறுகிய, நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்" என்று தெரிவித்தார்.

இந்த முன்முயற்சியை ஒருங்கிணைத்துவரும் சென்னை மெட்ராஸ் பொறியியல் வடிவமைப்புப் பிரிவின் ஆர்பிஜி ஆய்வகப் பேராசிரியரும், சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையத்தின் தலைவருமான பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், “விபத்துக்கு முந்தையநேர இடைவெளியில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, சாலைப் பாதுகாப்பை அமல்படுத்துவதில் அறிவியல் ரீதியான அணுகுமுறை அவசியத் தேவையாகும்.

விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையினர் திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தை மேற்கொள்ளும் வகையில், 3 எம் & இ மாதிரியைப் பயன்படுத்தி விபத்து குறித்து விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் மதிப்பிடுவது பயனுள்ளதாக அமையும். தமிழத்தில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு, இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆர்வமாக உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x