Last Updated : 29 Jul, 2022 04:53 PM

 

Published : 29 Jul 2022 04:53 PM
Last Updated : 29 Jul 2022 04:53 PM

"விரைவு விசாரணையில் நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்” - தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பெருமிதம்

உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் சங்கம் நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆண்டு விழாவில் பேசுகிறார் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி | படம்: நா.நாகரத்தினம்.

மதுரை: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பாண்டாரி கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 18-வது ஆண்டு விழா மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் (எம்எம்பிஏ) 17-வது ஆண்டு விழா ஆகியன உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இதையொட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் கேக் வெட்டினர். முன்னதாக பார் அசோசியேஷன் தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார்.

இதில் தலைமை நீதிபதி பேசியது: ''நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. இதில் மதுரைக் கிளையின் பங்கு அதிகம். கரோனா காலத்தில் அதிகளவில் வழக்குகளை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் சாதனை படைத்துள்ளது.

இது வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது. வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும் மக்கள் நினைத்தால் மட்டுமே நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இல்லாவிட்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். இதனால் வழக்கு தொடர்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும்'' என்று தலைமை நீதிபதி பேசினார்.

முடிவில் பார் அசோசியேஷன் செயலர் கே.பி.நாராயணகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x