Published : 30 Sep 2016 08:10 AM
Last Updated : 30 Sep 2016 08:10 AM

இந்திய பதில் தாக்குதல் எதிரொலி: ‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகை நீட்டிப்பு

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அதன் ஒரு அம்சமாக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்துக்கு ஒரு தடவை ‘ஆபரேஷன் அம்லா’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமாரி வரையுள்ள 13 கடலோர மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 2-வது பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இதற்கு ‘சாகர் காவஜ்’ (கடல் கவசம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மத்திய கடலோரப் படை, கடற்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், தமிழக போலீஸார் இணைந்து செயல்படுகின்றனர். மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோரப் படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங்களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சம். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணியுடன் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி அசம்பாவித சம்பவங்களை நடத்த வாய்ப்புள்ளது என்பதால், பாதுகாப்பு ஒத்திகையை நீட்டித்து இன்று காலை 6 மணி வரை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x