Published : 30 Sep 2016 07:20 PM
Last Updated : 30 Sep 2016 07:20 PM

திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: முத்தரசன் மறுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை வரும் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்றும், போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட அளவில் பேசி உடன்பாடு காண்பதும் என்றும் முடிவு செய்துள்ளன.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் மாவட்ட அளவில் பேசி உடன்பாடு கண்டு வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக வெளியான செய்தி மிகவும் தவறானது.

திருவாரூர் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித உடன்பாடும் செய்து கொள்ளவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மக்கள் நலக் கூட்டணிக்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் இடமளிக்காமல் கட்சியின் வெற்றிக்கும், மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடுபட வேண்டும்'' என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x