Published : 30 Sep 2016 12:49 PM
Last Updated : 30 Sep 2016 12:49 PM

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித் தார்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை விளக்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் அவர் திருவாரூரில் அண்மையில், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

புதிய கல்விக் கொள்கை முன்வடிவுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த அவகாசம் போதாது.

ஆண்டுதோறும் மத்திய அரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் துறையினரிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு, ஒரு தலைமுறையையே உருவாக்குகின்ற கல்வித் திட்டத்தை உருவாக்கும் போது ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்பைக் கூட்டி கருத்துகளைப் பெற ஏன் மறுக்கிறது?

தமிழக அரசு தனது கருத்தை இந்திய அரசுக்குப் பதிவு செய்யும் முன்னர் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அமைப்புகளை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை.

எனவே, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் ஆலோசிக்காமல் கொள்கை முடிவுகளை இறுதிப்படுத்துவதை ஏற்க முடியாது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதிதான் இந்த முன்மொழிவுகள் 11 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிராந்திய மொழி மட்டுமே தெரிந்த மக்களால், அதைப் படித்து புரிந்துகொள்ள சாத்தியமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட மீதமுள்ள 11 மொழிகளில் அதனை மொழிபெயர்த்து வெளியிடவில்லை. எனவே, கால அவகாசத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டும்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக புதிய கல்விக்கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்களை எதிர்ப்பதற்காக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை, 40 அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாகியுள்ளன. தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று மத்திய அரசிடம் வழங்கவுள்ளனர்.

அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் மாற்றுக் கல்விக்கான மாநாடு நடத்தி அதில் மாற்றுக் கல்விக் கொள்கையை இக்கூட்டமைப்பினர் வெளியிட உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x