Last Updated : 26 Jul, 2022 11:58 AM

 

Published : 26 Jul 2022 11:58 AM
Last Updated : 26 Jul 2022 11:58 AM

கள்ளக்குறிச்சி கலவரம் | இதுவரை 309 பேர் கைது: தேர்வு காரணமாக இரு சிறுவர்களுக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்க உரிமையாளர் முன்வரவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருபது சிறுவர்களில் 2 பேருக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம். மேலும் கலவரத்தில் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் போராட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்கை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையை துவக்கிய சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார், காவல்துறை வாகனத்திற்கு முதலாவதாக தீ வைத்ததாக சின்ன சேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து, கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கலவரம் தொடர்பாக இதுவரை 309 பேர் 14 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அப்பகுதியில் உள்ள செல்போன் நெட்வொர்க் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறச் சாலையோரங்களிலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கிடந்தது.

இப்படி சாலையோரங்களில் இருந்து 141 இருசக்கர வாகனங்களை போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலமாக லாரியில் ஏற்றி சின்னசேலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு அந்த வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து கலவரத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணையைச் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் பகலவன், "பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தைக் கேட்டு இதுவரை அதன் உரிமையாளர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை. இதுவரை கைது செய்யப்பட்ட நபர்களின் இரு சக்கர வாகனங்கள் அதில் எதாவது இருக்கிறதா என்று விசாரணை செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் இரு சக்கர வாகனங்களை விட்டுச் சென்றவர்களை வாகன பதிவெண் கொண்டு அடையாளம் காண முடியும். அதில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். கலவரத்தின் போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் வாகனங்களும் இருக்கலாம்.

மேலும் பயத்தில் அவர்கள் விட்டு சென்று இருக்கலாம். அதில் அப்பாவி மக்களும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அனைத்து தரவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு 309 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x