Last Updated : 25 Jul, 2022 02:00 PM

 

Published : 25 Jul 2022 02:00 PM
Last Updated : 25 Jul 2022 02:00 PM

“மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது” - ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை: “கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தற்போது இந்த விலைவாசி உயர்வு என்பது அவர்களின் வயிற்றில் அடித்து வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடினார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களை விலைவாசி உயர்வினால் வாட்டி வதைப்பதாக திமுக அரசை கண்டித்து டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்று பேசிய ஆர்.பி. உதயகுமார், "மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தனர். குறிப்பாக மாதந்தோறும் மின் கட்டடணத்தை கணக்கெடுப்போம் என்று கூறினார்கள். தற்போது ஆள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள். வேளாண் பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு 9 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் மின்சாரக் கட்டணம் 170 ரூபாய், 300 யூனிட் மின்சாரம் கட்டணம் 530 ரூபாய், 400 யூனிட் மின்சாரம் 830 ரூபாய், தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் 200 யூனிட் மின்சாரம் 225 ரூபாய், 300 யூனிட் மின்சாரம் 675 ரூபாய், 400 யூனிட் மின்சாரம் 1,725 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். குறிப்பாக 200 யூனிட் பயன்படுத்துவோர் 63.35 லட்சம் மின் நுகர்வோர்கள், 300 யூனிட் பயன்படுத்துவோர் 36.25 லட்சம் மின் நுகர்வோர்கள் ஆவார்கள்.

நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது 750 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நெசவாளர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 78 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 600 சதுர அடி வீடுகள் எண்ணிக்கை 45.53 லட்சம் ஆகும். இவர்களுக்கு 25% வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 ரூபாய் சதுரஅடி உள்ள வீடுகளில் எண்ணிக்கை 19.23 லட்சம் ஆகும். இவர்களுக்கு 50% வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 83.18 சதவீதம் ஏழை, எளிய மக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, இதில் வாடகை வீட்டில் குடியிருப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சொத்து வரி வருவாய் மூலம் அரசுக்கு ரூ.1750 கோடி கோடி கிடைக்கும். இந்த வருவாயை மற்ற துறை மூலம் ஈட்டி மக்கள் சுமையை அரசு குறைத்து இருக்கலாம்.

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தற்போது இந்த விலைவாசி உயர்வு என்பது அவர்களின் வயிற்றில் அடித்து வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. ஆகவே, இந்த விலைவாசி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x