Published : 25 Jul 2022 09:15 AM
Last Updated : 25 Jul 2022 09:15 AM

மதுரை தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சேவை: விடுமுறை நாளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தெப்பக்குளத்தில் நேற்று மீண்டும் படகு சேவை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகில் சென்று தெப்பக்குளத்தின் அழகை கண்டு ரசித்தனர். படம்: என்.தங்கரத்தினம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர்.

மதுரையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பி செல்லக்கூடிய இடமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு மாலையில் அதிக அளவில் உள்ளூர் மக்கள் வருகை தருகின்றனர். அதனால், தெப்பக் குளத்தை சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக வியாபாரம் நடை பெறுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து நேரடி யாக தண்ணீர் கொண்டு வரப்படு வதால் ஆண்டு முழுவதுமே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து சுற் றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்விக்கும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது.

18 பேர் அமரக்கூடிய ஒரு படகு, 8 பேர் அமரக்கூடிய ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டதால் விடுமுறை நாளில் அதிகளவு கூடும் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைஏற்பட்டது.

கடந்த காலத்தில் பெடல் படகுகள் இருந்தன. தற்போது மோட்டார் படகு கள் மட்டுமே உள்ளன. அதனால் கூடுதலாக பெடல் படகுகளை இயக்க மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால், படகுகள் பழுதடைந்ததால் தெப்பக்குளத்தில் சில மாதங்களுக்கு முன்பு படகு சேவை நிறுத்தப்பட்டது. அதனால், மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், குழந்தை கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே, பழுதடைந்த படகுகளைப் பராமரித்து நேற்று மாலை முதல் படகு சேவை தொடங்கப்பட்டது. அதனால், விடுமுறை நாளான நேற்று தெப்பக்குளத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x