Last Updated : 24 Jul, 2022 06:33 PM

 

Published : 24 Jul 2022 06:33 PM
Last Updated : 24 Jul 2022 06:33 PM

ஒரு மாணவருக்குக் கூட கல்விக்கடன் தராத சூழல்: தவிக்கும் புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்கள்

புதுச்சேரி: பாட்கோ மூலம் ஒரு மாணவருக்குகூட கடந்த கல்வியாண்டில் கடன் தரப்படவில்லை. 12 ஆண்டுகளில் நிலுவைத்தொகை ரூ. 33.34 கோடியாக உள்ளது. இதனால் ஆதிதிராவிட மாணவர்கள் தவிக்கின்றனர். அதேநேரத்தில் ரூ. 2.94 லட்சம் செலவு செய்து தனியார் நட்சத்திரஹோட்டலில் அதிகாரிகள் கூட்டம் நடத்தியுள்ளதாக ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாட்கோ மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் முறையே வழங்காமலும், தவணைக் காலம் முடிந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது நிலவுகிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத்தலைவர் ரகுபதி ஆளுநரிடம் புகார் தந்துள்ளார்.

இதுபற்றி ஆளுரிடம் தந்துள்ள மனு விவரம் தொடர்பாக ரகுபதி கூறியதாவது:

”பாட்கோ கல்விக்கடன், நிலுவைத்தொகை தொடர்பாக தகவல் கேட்டும், முறையீடு செய்தும் தரவில்லை. இதையடுத்து மத்திய ஆணையத்தில் முறையிட்டேன். அதையடுத்து தலைமைச்செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தகவல் தந்தனர்.

கடந்த 2010-2011 கல்வியாண்டு முதல் 2021-2022 வரையிலான 12 ஆண்டுகளில் 3454 மாணவர்களின் கடனை புதுப்பித்துள்ளனர். குறிப்பாக 2019-2020 -கல்வியாண்டில் ஒரு மாணவருக்கும், 2021-2022 கல்வியாண்டில் ஒரு மாணவருக்குக்கூட கல்விக்கடன் வழங்கவில்லை. இதுபோல் கடந்த 12 ஆண்டுகளில் கல்விக்கடன் பெற்றவர்கள் வைத்துள்ள நிலுவைத் தொகை 33 கோடியே 24 லட்சமாகும்.

இதனால் புதியதாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படாமலும், காலக்கெடு முடிந்தவர்களிடம் கடன் தொகைகளை வசூலிக்காமலும், மீண்டும் மீண்டும் புதுப்பித்து வந்துள்ளது தெரியவருகிறது. இதன்மூலம் அரசுக்கு ஆதிதிராவிடர் மாணவர்களின் நலனில் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், 2021-2022 கல்வியாண்டில் ஒரு மாணவருக்குக்கூட கல்விக்கடன் வழங்காமல் நிதி செலவின கூட்டத்தினை அரசு கருத்தரங்கக் கூடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றில் நடத்தாமல் தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரூ. 2.94 லட்சம் செலவு செய்து நடத்தியுள்ளனர். இதனால் ஆதிதிராவிட மாணவர்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.

எனவே நிலுவையில் உள்ள பலகோடி கல்விக்கடனை வசூல் செய்து புதியதாக கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்விக்கடன் தரவேண்டும்." என்று குறிப்பிட்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x