Published : 23 Jul 2022 01:47 PM
Last Updated : 23 Jul 2022 01:47 PM

அதிமுக வங்கி கணக்கை முடக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் 

சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கடந்த வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார்.

அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அன்றே கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது.

மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி அவரின் கடிதத்தை வங்கிகள் நிராகரித்தன. மேலும் எடப்பாடி பழனிசாமியின் கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக வின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "அதிமுக தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை தான் தான் அதிமுக பொருளாளர். தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை 7 கணக்குகளில் பணப்பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x