Last Updated : 21 Jul, 2022 01:24 PM

 

Published : 21 Jul 2022 01:24 PM
Last Updated : 21 Jul 2022 01:24 PM

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி: மறு பிரேத பரிசோதனை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதிக் கட்டிடத்தில் 3-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்குப் பின் கடந்த 16-ம் தேதி ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்தபோது, அவரது உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் மறுப்புத் தெரிவித்து, தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில், மறு பிரேதப் பரிசோதனை நடத்தவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவியின் உடலை சிபிசிஐடி விசாரணைக் குழு முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை நடத்த கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. இந்த பரிசோதனையின்போது மாணவியின் பெற்றோர் உடனிருக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால், வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மறு பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடர்பாக நேற்று முன்தினம் சின்னசேலம் வட்டாட்சியர், மறு பிரேத பரிசோதனையில் பங்கேற்க வருமாறு மாணவியின் பெற்றோர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், அவர்கள் வர இயலாது என்பதுடன் உடலை பெற்றுக் கொள்ளமாட்டோம் என்று அறிவித்தனர்.

இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்குழு முன்னிலையில், தமிழக அரசின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் மறு பரிசோதனை நடத்தி முடித்து, உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன், நேற்று முன் தினம் நள்ளிரவு மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில், இன்று பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. | முழு விவரம்: “சென்னை உயர் நீதிமன்றத்தையே நாடுங்கள்” - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை |

இதையடுத்து, மாணவியின் பெற்றோர், மாணவியின் உடலை வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து உடலை பெற்றுக் கொண்டு, மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x