Published : 19 Jul 2022 11:58 AM
Last Updated : 19 Jul 2022 11:58 AM

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை: விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. மேலும் இது குறித்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை தெரிவித்து இருந்தது.

இதன்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில், துணைச் செயலாளர் தனசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழு அமைத்து உயர்கல்வி துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழு ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x