Published : 19 Jul 2022 11:51 AM
Last Updated : 19 Jul 2022 11:51 AM

கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியும், மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி சதீஷ்குமார், 3 அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழவை நியமித்து, மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த மருத்துவக் குழுவில் தங்களது தரப்பைச் சேர்ந்த மருத்துவரை உடனிருக்க அனுமதி கோரி மாணவியின் தந்தை முறையீட்டார். இந்த முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் மாணவியின் தந்தை தரப்பில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், மறு உடற்கூராய்வின்போது, தங்கள் தரப்பு மருத்துவரை உடனிருக்க அனுமதிக்க கோரியும், அதுவரை மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.

மாணவியின் மறு உடற்கூராய்வை இன்று நிறுத்திவைக்க உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x