Published : 18 Jul 2022 09:15 AM
Last Updated : 18 Jul 2022 09:15 AM

நீர்வரத்து அதிகரிப்பால் திருச்சியில் காவிரி படித்துறை பாதைகள் அடைப்பு - போலீஸ் எச்சரிக்கை

ஆபத்தை உணராமல் தடையை மீறி ரங்கம் அம்மா மண்டப படித்துறையில் நேற்று நீராடிய மக்கள் | படம்: ர.செல்வமுத்துகுமார்.

காவிரி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் திருச்சியில் உள்ள காவிரி படித்துறைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தடையை மீறி பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதால் விபத்துகள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் கரையோர மக்கள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், ஆடி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரிக்கு வருவார்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கருட மண்டப படித்துறை, கீதாபுறம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட அனைத்து படித்துறைகளிலும் யாரும் இறங்காதவாறு காவல் துறையினர் தடுப்புகள் அமைத்திருந்தனர். மேலும், ஆற்றுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதிகள் அடைக்கப்பட்டு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆடி மாத பிறப்பையொட்டி நேற்று காலை பெண்கள் ஏராளமானோர் அம்மா மண்டபம் வந்தனர். ஆனால், படித்துறை அடைத்திருப்பதை கண்டு பலரும் திரும்பிச் சென்ற நிலையில், சிலர் தடுப்புகளைத் தாண்டிச் சென்று ஆபத்தான நிலையில் நீராடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x