Last Updated : 17 Jul, 2022 09:15 AM

 

Published : 17 Jul 2022 09:15 AM
Last Updated : 17 Jul 2022 09:15 AM

மதுரை | மாற்று கட்சியிலிருந்து வந்தோருக்கு முக்கிய பதவிகள்: பாஜகவினர் வேதனை

பாஜகவில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து சேர்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக பல ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் மாநில தலைவர்கள், மாவட்டத் தலைவர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமிக்க அதிகாரம் உள்ளது. அதன்படி புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் போதெல்லாம் புதிய நிர்வாகிகள் நியமனமும் நடைபெறும். பழைய நிர்வாகிகளுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.

இக்கட்சியில் அரசு தொடர்பு பிரிவு, ஊடக தொடர்பு பிரிவு என 25-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் உள்ளன. இந்த துணை அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர்கள், செயலர்கள், துணைச் செயலர்கள் என ஏராளமான பொறுப்புகள் உள்ளன.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் அதிக அளவில் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். புதியவர்களுக்கு கட்சியில் சேர்ந்ததும் பொறுப்புகள் வழங்கப்படுவதால், பொறுப்புக்கு ஆசைப்பட்டு பலர் கட்சியில் சேர்கின்றனர்.

இதுபோன்று புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதால் பாஜகவிலும், அதன் சார்பு அமைப்புகளிலும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகர் பாஜகவில் சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் புதிதாக கட்சியில் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக வழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து உயர்நீதிமன்ற கிளை பாஜக வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:

மத்தியில் பாஜக 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இருப்பினும் மத்திய அரசின் துறைகளில் திமுக, காங்கிரஸைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் இன்னும் பொறுப்புகளில் உள்ளனர். இவர்களை மாற்றி பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என பாஜக மாநில தலைமை மற்றும் தேசிய தலைமைக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதேபோல், மதுரை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு கட்சியில் உரிய பொறுப்புகள் வழங்கப்பட வில்லை. அதற்கு மாறாக வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு கட்சியில் சேர்ந்த உடனேயே முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x