Published : 15 Jul 2022 06:50 AM
Last Updated : 15 Jul 2022 06:50 AM

மறைமலையடிகள் நினைவு இல்லம் அமைப்பது எப்போது? - தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

பல்லாவரம்: புகழ்பெற்ற தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான மறைமலையடிகளார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதுபவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி, தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.

இவரின் பெயரில் கடந்த 2019-ம்ஆண்டு முதல் அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் விருது வழங்கப்படுகிறது. தனித் தமிழில் புதிய படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், 8 கிராம் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகிறது.

தமிழ் மொழியானது தாய்ப்பால் போல தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, கலப்பில்லாத தமிழ் சொற்களை உருவாக்கிய மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்தது சென்னை பல்லாவரத்தில்தான். அவர் வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2019-ல் மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை அறங்காவலரும், மறைமலையடிகளாரின் பேரனுமான மறை.தி.தாயுமானவனும் அரசிடம் மனு அளித்தார். இதனை ஏற்ற அரசு அவரது இல்லத்தை நினைவிடமாக்க முடிவு செய்தது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நினைவு இல்லத்தின் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான மதிப்பீடு இதுவரை தயாரிக்கப்படவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை ௭டுத்து ஆவன செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அடிகளாரின் பேரன், மறை.தி.தாயுமானவன் கூறும்போது, அவர் வாழ்ந்த வீடு உள்ள தெருவின் பெயரையும் மாற்றுமாறு கோரிக்கை வைத்தோம். எந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேறவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, மறைமலை அடிகளார் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x