Published : 13 Jul 2022 06:44 PM
Last Updated : 13 Jul 2022 06:44 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் அடிக்கடி திருடுபோகும் நோயாளிகளின் இரு சக்கர வாகனங்கள்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘பார்க்கிங்’ வசதி இல்லாமல் பனங்கல் சாலையில் மாநகராட்சி ‘பார்க்கிங்’கில் கட்டணம் செலுத்தி நிறுத்தப்படும் நோயாளிகள், பார்வையாளர்களுடைய இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மட்டுமில்லாது தென் தமிழகம் முழுவதும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இவர்கள் பஸ்களில் மதுரைக்கு வந்து அதன்பிறகு ஆட்டோ அல்லது உள்ளூர் டவுன் பஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். ஆனால், மருத்துவமனையில் ‘பார்க்கிங்’ வசதி சுத்தமாக இல்லை. மருத்துவர்களே அவரவர் சிகிச்சைப்பிரிவு முன் இடநெரிசலில் நிறுத்தி செல்கிறார்கள்.

மருத்துவப் பணியாளர்கள் ஆங்காங்கே சந்துகளிலும், சிகிச்சைப் பிரிவு முன்பும் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். நோயாளிகள், மருத்துவமனைக்கு எதிரே பனங்கல் சாலையில் சாலையோரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். பனங்கல் சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியே இல்லை. ஆனால், மாநகராட்சியில் சாலைகளை ‘பார்க்கிங்’ கட்டணம் டெண்டர்கள் எடுத்தவர்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பனங்கல் சாலையையும் ஆக்கிரமித்து அதில்
நோயாளிகள், பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.7 கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

பார்க்கிங் கட்டணம் வசூல் செய்தால் வாகனங்கள் திருடு போகாமல் பாதுகாக்கவும், வெயில், மழையில் பாதுகாக்கும் வகையிலும் வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கும் மாநகராட்சி டெண்டர்தாரர்கள் அநியாயமாக ரூ.7 கட்டணம் வசூல் செய்கிறார்கள். கட்டணம் பெற்ற வாகனங்களை திருடு போகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் டெண்டர்தாரர்களுக்கு உண்டு. ஆனால், அவர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதோடு சரி, வாகனங்களை திருடுப்போகாமல் கண்காணிப்பது இல்லை. அதனால், பனங்கல் சாலையில் நோயாளிகள், பார்வையாளர்கள் நிறுத்தும் வாகனங்கள் அடிக்கடி திருடுப்போகிறது. திருடுப்போகும் வாகனங்களுக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்வதில்லை. அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் திருடுப்போன வாகனங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

பனங்கல் சாலை ‘பார்க்கிங்’ மட்டுமில்லாது மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களும் அடிக்கடி திருடுப்போகிறது. மருத்துவமனை அவுட் போலீஸ் போலீஸார், மருத்துவமனை வளாகத்தில் ரோந்து செல்வதில்லை. மருத்துவமனை போலீஸார் பெரும்பாலும் மாற்றுப் பணிக்காக வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அதனால், மருத்துவமனையில் போலீஸார் கண்காணிப்பு இல்லாததால் வாகனங்கள் ஒரு புறம் திருடுப்போவதோடு மருத்துவ உபகரணங்களும் திருடுப்போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘பனங்கல் சாலையில் வாகனங்களை திருடுபோகாமல் இருப்பதை கண்காணிக்க மாநகராட்சி டெண்டர் எடுத்தவர்கள்தான் ஊழியர்கள் போட்டு பாதுகாக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் திருடுப்போவதில்லை’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x