Published : 01 Jun 2014 02:19 PM
Last Updated : 01 Jun 2014 02:19 PM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது

தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைத்திலிருந்து சனிக்கிழமை 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

தலைமன்னார் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் 7 விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த 33 மீனவர்களை எல்லைத் தாண்டிவந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இலங்கை நீதிமன்றம் விடுமுறை என்பதால், நாளை (திங்கள்கிழமை) மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் இரண்டரை ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 14 மீனவர்களை விடுதலை செய்து, இன்னும் அவர்கள் தாயகம் திரும்பாத நிலையில், மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்தி மோடி, மீனவர் பிரச்சனையில் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விரைவில் மூன்றாம் கட்ட பேச்சு

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து மே 29-ம் தேதி வரை மீன்பிடித் தடைக் காலம் அமலில் இருந்தது. இதனால் ராமேஸ்வரம் மற்றும் கடற்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெற்ற இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தையின்போது தமிழக விசைப் படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி போன்ற மீன்பிடிமுறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 வருட காலம் அவகாசம் வேண்டும் எனவும், அதற்கு பதிலாக இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் என தமிழக மீனவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இலங்கை பிரதிநிதிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கடல் வளத்தை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து அழித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

அதே சமயம் பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில், தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் வாதிட்டனர். இறுதியில் பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு ஏற்படாமலேயே முடிவடைந்தது.

நரேந்திர மோடி தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள சூழலில், விரைவில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்கள் தமிழக மீனவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x