Published : 18 Jun 2014 08:53 AM
Last Updated : 18 Jun 2014 08:53 AM

நீலகிரியை சேர்ந்த 6 செவிலியர்கள் இராக்கில் பரிதவிப்பு

இராக்கில் சிக்கியுள்ள நீலகிரியை சேர்ந்த செவிலியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என அவர்களின் உறவினர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இராக்கில் ஐ.எஸ்.ஐ.எல்., தீவிர வாதிகளால் பதற்றம் நிலவுவதால் இராக்கிலிருந்து இந்தியர்கள் வெளி யேற இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இந்தியர்கள் வெளி யேறுவதில் சிக்கல் நிலவுவதால் இராக்கில் சிக்கியுள்ள இந்தியர் களை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூரை அடுத்த தர்மகிரி யைச் சேர்ந்த சினி, சிலி, சிமி, அலினா, நீத்து, மமீதா ஆகிய 6 பேர் செவிலியர் பணிக்காக இராக் சென்றிருந்தனர். இராக்கில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இவர்கள் பணிபுரிகின்றனர். இராக் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி வருவதால் இவர்கள் இராக்கில் பரிதவித்து வருகின்றனர்.

சினியின் கணவர் கிங்சன் கூறும்போது, “தற்போது இராக் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி வருவதால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என தெரியவில்லை. திங்கள்கிழமை வரை தொலைபேசியில் பேசினர். தற்போது தொலைபேசி தகவலும் இல்லை. செவ்வாய்கிழமை மாலை அவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. ஆனாலும் தற்போது இராக்கில் அரங்கேறி வரும் நிகழ்வுகளால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். மத்திய அரசு உடனடியாக உரிய முயற்சி மேற்கொண்டு இராக்கில் பரிதவித்துவரும் செவிலியர் 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டு இந்தியா அழைத்து வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x