Published : 09 May 2016 11:13 AM
Last Updated : 09 May 2016 11:13 AM
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்துள்ள ஜெயலலிதா மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சத்தியநாதனை ஆதரித்து சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் கிராமத்தில் அவர் நேற்று முன்தினம் இரவு பேசியதாவது:
மூன்று முறை முதல்வராக ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு அளித்தும், தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலின்போது மட்டுமே மக்களை சந்திக்கிறார். மற்ற நேரங்களில் மக்களை சந்திப்பதில்லை. சென்னை மழை, வெள்ள சேதத்தின்போது கூட அவரது கால் தரையில் படவில்லை.
ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்றபோது, முன்பெல்லாம் முடியாது என்ற ஜெயலலிதா, தற்போது படிப்படி யாக குறைப்போம் எனக் கூறுகிறார்.
டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவது என்றால் என்ன?. மாரியம்மன் துணையுடன் அமிர்தயோகமும், சித்தயோகமும் கூடி வரும் வேளையில் 19-ம் நம்பர் டாஸ்மாக் கடையை மூடவுள்ளோம் என்றும், அதற்கு சுற்றம் சூழ வருகை தாருங்கள் என பத்திரிகை வைத்து அழைத்து மூடுவார்களோ?. ஜெயலலிதா மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. கருணாநிதியின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT