Published : 02 May 2016 05:32 PM
Last Updated : 02 May 2016 05:32 PM

கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: சுற்றுலா தலங்களுக்கு தனியார் பஸ்கள் செல்ல தடை

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பஸ்கள் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. வார விடுமுறை நாட்களில் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் தொலைதூரத்தில் இருந்து வாகனங்களில் சுற்றுலா வருபவர்கள் வாகன நெரிசலில் சிக்கி முழுமையாக சுற்றுலாத் தலங்களை கண்டு செல்ல முடியாதநிலை ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டது. இந்நிலையைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல்கட்டமாக கொடைக் கானலில் இருந்து வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய வழியான கலை யரங்கம் பகுதியில் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிர்க்க கலையரங்கம் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் தடையின்றி செல்லமுடியும். இதனை செயல்படுத்தும்விதமாக சாலையின் நடுவில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் கார் நிறுத்தும் இடங்கள், ஒரு வழிப் பாதை என பல்வேறு கட்டுப்பாடு களை விதிக்க போலீஸார் நட வடிக்கை மேற்கொண்டுவருகின்ற னர். இதன் ஒரு கட்டமாக கோடை சீசன் முடியும் வரை சுற்றுலா தலங்களுக்கு தனியார் சுற்றுலா பஸ்களை அனுமதிப்பதில்லை என போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதனால் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பமுடியும்.

இதுகுறித்து போலீஸார் நேற்று கூறியதாவது: கொடைக்கானலில் கோடைசீசன் தொடங்கிய நிலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக கார் நிறுத்தும் இடங்களை ஒழுங்குபடுத்துதல், பஸ் உள்ளிட்டவற்றை சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடைவிதிப்பது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் கார்களை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறும் கோடை விழாவின்போது திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்ட போலீஸார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு வந்துவிடுவர், எனவே போக்குவரத்தை சமாளிப்பது எளிதாகிவிடும் என்றனர்.

புதிய கட்டுப்பாடு

கொடைக்கானலுக்கு தனியார் பஸ்களில் சுற்றுலாவரும் பயணிகள் இனி சுற்றுலாத் தலங்களுக்கு தாங்கள் வரும் பஸ்களிலேயே செல்ல முடியாது. மாறாக கொடைக்கானல் நகரில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்துதான் சுற்றுலாத் தலங்களை அவர்கள் பார்க்க செல்ல முடியும். இந்தக் கட்டுப்பாடு நேற்று முதல் மே 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x