Last Updated : 30 Jun, 2022 05:07 PM

4  

Published : 30 Jun 2022 05:07 PM
Last Updated : 30 Jun 2022 05:07 PM

“அதிமுகவை கபளீகரம் செய்ய நினைக்கும் சசிகலாதான் முதன்மை எதிரி” - கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி: “அதிமுகவில் தன் தார்மிக உரிமையை இழந்துவிட்டார் ஒபிஎஸ்” என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏ மற்றும் பி ஃபார்மில் கையொப்பமிட குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் ஏ பார்ம் மற்றும் பி பார்மில் கையொப்பம் இடுகின்ற தார்மிக உரிமையை ஓபிஎஸ் இழக்கிறார்.

காரணம், கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடுவதை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஆணையிட்டு அந்த ஆலோசனையின் அடிப்படையில் கடந்த 14-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அங்கு கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அந்த விவாதத்தில் முக்கிய கரு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட கரு குறித்து பொறுப்பாளர்கள் உடன் விவாதிக்க வேண்டும். மாறாக பன்னீர்செல்வம் பொதுக்குழு நடத்துவதை விரும்பாமல் அவரே ஒரு கற்பனை ஏற்படுத்திக்கொண்டு பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து மாவட்ட செயலாளர்கள் கடந்த 14ம் தேதி நடந்த கூட்டத்தில் விவாதித்தார்கள். அதனால் கழக தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனர். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் நிலவுவதால் பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

பொதுக்குழு உறுதியாக நடைபெறும் என தெரிவித்த பிறகு கட்சியினுடைய தலைவர், பொது குழுவிற்கு வந்து விவாதிக்க வேண்டும். பொதுக்குழுவிற்கு முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டது. மாறாக ஒரு கட்சியின் தலைவர் நீதிமன்றத்திற்கு செல்கிறார். கட்சியின் கொள்கை விதிப்படி கட்சியின் உறுப்பினர் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றால் கட்சியின் விதிப்படி உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இதை நன்கு அறிந்த பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்கிறார், மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படும் என காவல் நிலையத்தில் மனு கொடுக்கிறார்.

எப்படியாவது இந்த பொதுக்குழுவை நிறுத்திவிட வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அப்படிப்பட்ட பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு கடிதம் எழுதும் தார்மிக உரிமையை இழக்கிறார்.

மேலும், ஒரு கட்சி உறுப்பினரே நீதிமன்றத்திற்கு சென்றால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டும். இதை நன்கு அறிந்து ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டது. அந்த அடிப்படையில் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும், ''ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வரும் வரை 23 தீர்மானங்களை நிராகரிக்கிறோம்'' என்றனர். இதன் மூலம் அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் உறுப்பினர்களும் ஒற்றை தலைமை வேண்டும் என கேட்கிறார்கள்.

14-ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 75 மாவட்ட செயலாளர்களில் 70 மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கேட்கிறார்கள். பொதுக்குழு முடிந்தபின்பு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 66 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என கேட்கிறார்கள். இதேபோல், தமிழகத்தில் அதிமுக சார்பில் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் தவிர 63 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறார்கள். மேலும், கட்சியின் உயிர்நாடியான 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் 2,582 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கேட்கிறார்கள்.

ஜனநாயக கட்சியில் இதைவிட ஒரு வலுவான ஆதரவு வேறென்ன இருக்க முடியும். இதை ஏன் ஓபிஎஸ் ஏற்க மறுக்கிறார்? இதை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். மேலும், ஓ.பன்னிர்செல்வம் பலமுறை கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்கிறார். இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பன்னீர்செல்வம், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு ஆளுநர் தேநீர் விருந்தில் அனைவரும் வெளியில் வந்த பின்பு முதல்வருடன் சென்று தேநீர் அருந்துகிறார்.

சட்டப்பேரவையில் பராசக்தியின் கதை வசனத்தை எனது தந்தை போற்றுகிறார், நாங்களும் அதன் ரசிகர்கள் என்று சொல்கிறீர்கள். இதை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவரது மகன், முதல்வர் ஸ்டாலினிடம் சென்று உங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்கிறார்.

இதனை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொது மேடையில் பேசுகிறார், இதை அதிமுக தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக ஆட்சியில் இருக்கும். 2 பேருக்கும் இடையே இருப்பது பங்காளி சண்டை. அதை நீர்த்துப் போகும் வகையில் ஒரு தலைவர் செயல்பட்டால் அதை யாரும் ஏற்க மாட்டார்கள். அந்த வகையில் பன்னீர்செல்வம் அதிமுகவில் நீர்த்துப் போய் விட்டார். அவரை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளது .

நீண்டகாலமாக கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பேசப்பட்டு வருகிறது இருந்தாலும் கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதால் அதை சமாதானம் செய்து கட்சியை ஒருங்கிணைத்து வந்தோம். அதற்கு பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் தான் இன்று ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்துள்ளது. ஒவ்வொரு சூழலிலும் அரவணைத்து செல்லாமல் காலம் கடந்து பன்னீர்செல்வம் வருவதால் ஊடகங்களில் நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம்.

எப்பொழுதும் தேர்தலில் அதிமுக முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த முறை தாமதமானதால் அதிமுகவில் முடிவு செய்ய முடியவில்லை என ஊடகங்கள் விமர்சிக்கிறது. இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

சட்டம் திமுக கையில் உள்ளதால் ஏற்கெனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒருதலைபட்சமாக செயல்பட்டார்கள். அதன் காரணமாக நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கிறோம். அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் வலிமையோடு செயல்பட வேண்டும் அந்த அடிப்படையில்தான் ஒரு ஆதிக்க சக்திகள் இந்த கட்சியை கைப்பற்றி விடக்கூடாது என்று பன்னீர்செல்வம் இணைந்து போராடினேன். அப்பொழுது முதல்வராக பழனிசாமி இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே இணைப்புப் பாலமாக ஒருமித்த கருத்தோடு இணைந்து இந்தக் கட்சியை வழிநடத்தினார். அதில் யார் பக்கம் இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. இந்த கட்சி சிதறவிடாமல் ஒன்றுபட்டு செயல்பட நம்மால் என்ன முடியும் என சிந்தித்து தான் அன்று செயல் பட்டேன்.

இன்றும் இந்த இயக்கம் சிறப்பாக செயல்படும் வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என விரும்புவதால் பழனிசாமி தற்போது ஏற்றுக் கொண்டுள்ளோம். அதிமுகவை கபளீகரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் எனக்கு எதிரியே. அதில் சசிகலா முதன்மையானவர்'' என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, எம்எல்ஏக்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x