Published : 30 Jun 2022 07:25 AM
Last Updated : 30 Jun 2022 07:25 AM

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி

சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள்அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

முதல்நிலைத் தேர்வுகரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, பின் 2021-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நடத்தப்பட்டது. இதன்முடிவுகள் டிசம்பர் 14-ம் தேதிவெளியாகின. இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,800 தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இந்த முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சிபெற்ற 137 பேரின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக நேர்முகத் தேர்வு சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளது.

இதில் பங்கேற்க வரும்தேர்வர்கள் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதுதொடர்பான தகவல் தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x