Published : 27 Jun 2022 01:09 PM
Last Updated : 27 Jun 2022 01:09 PM

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், "இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது" என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வழக்கறிஞர், "மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குப்பதிந்தது தவறு.

மேலும், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு ஏற்கெனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது . உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை .வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது". எனவே வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x