Published : 26 Jun 2022 06:25 AM
Last Updated : 26 Jun 2022 06:25 AM

இ-சஞ்சீவனி திட்டத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தற்போது இ-சஞ்சீவனி சேவை திட்டம் தொடங்கப்பட்டு நல்ல முறையில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம் என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.

ஆய்வின்போது உடனிருந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: இ-சஞ்சீவனி திட்டம் என்பது மக்களின் நோய் தன்மை குறித்து மருத்துவர்களுடன் காணொலி வாயிலாக பேசி, அவர்களின் மூலம் மருந்துகள் பெற்றுத்தருகின்ற பணியாகும். இத்திட்டமானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது 4,000-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களில் செயல்பாட்டில் இருக்கிறது என்றார். அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x