Published : 23 Jun 2022 07:30 PM
Last Updated : 23 Jun 2022 07:30 PM

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி பள்ளியில் ‘காலை உணவு வங்கி’ தொடக்கம்

திருச்சி: தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வங்கி என்ற முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்புடன் 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு முதல் காலை உணவாக இட்லி, இடியாப்பம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், உப்புமா, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மக்கள் பங்களிப்புடன் ‘காலை உணவு வங்கி' என்ற முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழாவுக்கு, தேசிய கல்லூரி செயலாளர் கே.ரகுநாதன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில பாரத ஐயப்பா சேவா சங்க புரவலர் என்.வி.வி. முரளி ‘காலை உணவு வங்கி' திட்டத்தை தொடங்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநர் என். மணிமேகலை சிறப்புரையாற்றினார்.

இத்திட்டம் குறித்து இத்திட்டத்தை வடிவமைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வுபெற்ற முதல்வர் சி.சிவக்குமார் கூறியது:

காலை உணவுத் திட்டத்துக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் உதவிகளை செய்து வருகின்றனர். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் நாட்களில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். இவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பள்ளியிலேயே உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். காலையில் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை வலுப்படுத்த ‘காலை உணவு வங்கி' திட்டம் உதவும் என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன் கூறும்போது, ‘‘பெற்றோர்கள் காலையிலேயே வேலைக்குச் சென்று விடுவதாலும், ஏழ்மை நிலையில் இருப்பதாலும் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருகின்றனர். சோர்வில்லாமல் கற்றல் பணியிலும் ஈடுபடுகின்றனர்.

ஏற்கெனவே பள்ளியில் அட்சய பாத்திரம் என்ற காய்கறி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

விழாவில், முன்னாள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் என்.ஜெயராமன், குறுவள மைய ஆசிரியப் பயிற்றுநர் கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் என்.உமா நன்றி கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x