Published : 22 Jun 2022 07:23 PM
Last Updated : 22 Jun 2022 07:23 PM

மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகக் குழு கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஓர் அணையும் கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற அனைத்து கட்சிக் குழு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும் கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் அவருடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்த கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞரிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம். ஜல்சக்தி துறை அமைச்சர் எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை உறுதி செய்துள்ளார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x