Published : 22 Jun 2022 07:17 PM
Last Updated : 22 Jun 2022 07:17 PM

“செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வியாபாரமாவதை தடுக்க நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

சேலம்: “செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வியாபாரமாவதைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருச்சியில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சேலத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 27-வது இளங்கலை மருத்துவப் பட்டமேற்படிப்பு நிறைவு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: ''சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ள மாணவர்கள் தான், நீட் தேர்வின்றி, மருத்துவக் கல்விக்கு கடைசியாக தேர்வானவர்கள். இவர்களைப் போல, தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து, பட்டப்படிப்பை முடித்துள்ள மாணவர்களில் பலர் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள், நீட் தேர்வின்றி மருத்துவக் கல்வியில் சேர்ந்து, பல துறைகளில் பல பதக்கங்களை வென்று, தேர்ச்சி பெற்றுள்ளதை தமிழக முதல்வரிடம் தெரிவித்து, வாழ்த்து பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

எனவே, 3 தங்கப்பதக்கங்களுக்கு மேல் பெற்றுள்ள சேலம் மாணவர் சூர்யா உள்பட, தமிழகம் முழுவதும் 28 மருத்துவ மாணவர்களை, தமிழக முதல்வரை கோட்டையில் சந்தித்து, அவரிடம் வாழ்த்தும், பரிசும் பெறவுள்ளனர். தமிழகத்தில், சென்னை கேஎம்சி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதனை பெறுவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டிடம், பேராசிரியர்கள் நியமனம் உள்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.

தொற்று பாதிப்பு இந்தியாவில் 1000 முதல் 6000 என்ற அளவிலும், உலகின் சில நாடுகளில் 10,000 முதல் ஒரு லட்சம் வரையிலும், தமிழகத்தில் 700 வரையிலும் என பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்பட விதிகள் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். தடுப்பூசி போட்டு கொள்வது உயிரிழப்பு பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணையை போட்டுக் கொள்ளாதவர்கள் 39.06 லட்சம் பேர், 2-வது தவணையை போட்டுக் கொள்ளாதவர்கள் 1.12 கோடி பேர் உள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கினை குறிவைத்து, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.

தடுப்பூசி 86 லட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக போடப்பட்டது போல, பூஸ்டர் டோஸையும் இலவசமாக போடுவதற்கு, மத்திய அரசிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சரை நாங்கள் 2 முறை சந்தித்தபோது, இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம். இதுவரை தெளிவு கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் சில தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை, மக்களுக்கு இலவசமாக போடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது மிகக் கொடூரமான செயல். இது தொடர்பான விசாரணையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில சுகாதாரத் துறையுடன் தொடர்பு கொண்டு, கண்காணித்து வருகிறோம்.

விசாரணை மேற்கொண்டு வரும் சுகாதாரத் துறை குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். இதில், தவறிழைத்தவர்கள் மீது சட்ட விதிகளின்படி அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வியாபாரமாவதைத் தடுக்க, சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னை, திருச்சியில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்'' என்றார்.

பேட்டியின்போது, சுகாதாரத் துறைச் செயலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எம்எல்ஏ.,-க்கள் ராஜேந்திரன், சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x