Last Updated : 22 Jun, 2022 03:19 PM

 

Published : 22 Jun 2022 03:19 PM
Last Updated : 22 Jun 2022 03:19 PM

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேவாரம், திருவாசகம் பாடினர்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிவ பக்தர்கள் ஏறி தேவாரம், திருவாகம் பாடினர்.

கடலூர்: இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் கனகசபையில் ஏறி 30 நிமிடம் தேவாரம், திருவாசகம் பாடிட இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று (ஜூன்.21) உத்தரவிட்டார்.

மேலும், அந்த உத்தரவில் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பு இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டணம் எதுவும் செலுத்திடாமல் தேவாரம், திருவாசகம், உள்ளிட்ட திருமுறைகளை நடராஜ பெருமான் முன்பு ஓதி வழிபடலாம் எனவும், கோயில் நிர்வாகம் மறுக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கப்படவில்லை என்று தெய்வத்தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம், முத்தமிழ் பேரவை, சைவத்தமிழ் பேரவையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் இந்து அறநிலையத் துறையிடம் மனு அளித்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று (ஜூன்.22) காலை 11.30 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின மணியரசன் சிவ பக்தர்கள் ராவணன், ஏழுமலை, அம்சாராணி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் நடராஜர் கோயிலுக்கு சென்று கனகசபை (சிற்றம்பல மேடை) மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர். பின்னர் அவர்கள் கனகசபையில் இருந்து இறங்கி கீழிருந்து நடராஜ பெருமானை பார்த்தவாறு தேவாரம், திருவாசனம் பாடினர்.

கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மக்கள் அதிகாரம், சிவ பக்தர்கள் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேவாரம், திருவாகம் பாட போகிறோம் என்று மனு அளித்தது விட்டு கனகசபைக்கு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x