Published : 22 Jun 2022 07:06 AM
Last Updated : 22 Jun 2022 07:06 AM

வீட்டு வேலைகள் செய்வதற்காக ஆர்டர்லி வைத்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணிக்கவேல் மீதான நடவடிக்கை சரிதான் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில்தான் அந்த குடியிருப்பை மாணிக்கவேல் காலி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு ஜூன் 21-ம்தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, வீட்டு வேலைகளை செய்வதற்காக ஆர்டர்லி வைத்துக்கொள்ளும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ளஆர்டர்லிகளை உடனே திரும்ப பெறவும் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x