Published : 24 May 2016 10:16 AM
Last Updated : 24 May 2016 10:16 AM

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் கலந்து கொள்ளாதவர்களுக்காக ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் கலந்து கொள்ளாதவர்களுக்காக ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு ஜூன் 22-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடையும்.

சிறப்பு துணைத்தேர்வுக்கு பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் மே 24 (செவ்வாய்க்கிழமை) முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தனியார் கணினி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. “எச்” வகை தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு மைய விவரத்தை அனுமதிச் சீட்டில் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x