Published : 09 Jun 2022 12:16 PM
Last Updated : 09 Jun 2022 12:16 PM

பள்ளிகளில் தூய்மை இயக்கம்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: நீண்ட நாட்கள் கழித்து பள்ளிகள் முழுமையாக செயல்பட உள்ள நிலையில் தூய்மைப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில்"

> இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்

> பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பராமரிக்க வேண்டும்

> வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும்

> ஆய்வகங்களில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

> இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்

> கழிவறைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும்

> இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்

> குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும்

> பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மை படுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்

> பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்

> பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது.

> பல தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே. தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக பராமரித்து வருகின்றனர். இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x