Published : 08 Jun 2022 06:44 AM
Last Updated : 08 Jun 2022 06:44 AM

‘சின்னங்கள் வேறானாலும், சிந்தனையில் ஒன்று’ - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மின்கம்ப விவகாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விளக்கு கம்பங்களில் அதிமுக சின்னத்தை போன்றஅமைப்பை மாற்றிவிட்டு திமுக சின்னத்தைப் போன்ற அமைப்பைபொருத்தி இருப்பதால், அதிமுகவும், திமுகவும் சின்னங்களில் வேறுபட்டிருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலையின் மையத்தில், கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சியின் நிதியில் மின் விளக்கு கம்பங்கள் நடப்பட்டன.

இந்த மின்கம்பத்தின் மேல் பகுதியில் அதிமுக சின்னமான இரட்டை இலை போன்ற அமைப்பு இருந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்கம்பங்களில் உள்ள அதிமுக சின்னம் போன்ற அமைப்பை அகற்ற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, மின்கம்பங்களில் இருந்த இரட்டை இலை போன்ற அமைப்பு துணிகளைக் கொண்டு மறைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த விவகாரத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. துணிகளைக் கொண்டு மறைக்கவும் இல்லை.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) வரவுள்ளதையடுத்து விளக்கு கம்பங்களில் இருந்து அதிமுக சின்னம்போன்ற அமைப்புகள் இரு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அகற்றப்பட்ட அதே இடத்தில் திமுகவின் சின்னத்தைப் போன்று இரும்பு கம்பிகளால் வடிவமைத்து நேற்று முன்தினம் இரவில் பொருத்தப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதிமுகவும், திமுகவும் கட்சியில் வேறாக இருந்தாலும், தங்களது சின்னத்தை பொருத்த வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘இது திமுக சின்னம் இல்லை. மின்கம்பத்தில் உள்ள இரு விளக்குகளும் முறிந்து கீழே விழுந்துவிடாதபடி இருப்பதற்காக அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x