Last Updated : 04 Jun, 2022 11:21 PM

 

Published : 04 Jun 2022 11:21 PM
Last Updated : 04 Jun 2022 11:21 PM

கோவையில் ‘ஸ்விகி’ ஊழியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் கைது - பணியிடை நீக்கம் செய்த கமிஷனர்

கோவை: பீளமேடு அருகே, ‘ஸ்விகி’ உணவு விநியோக நிறுவனத்தின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அதிரடியாக கைதும் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (38). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மோகனசுந்தரம் குடும்பத்தினருடன், சின்னியம்பாளையத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தனர். ஆனால், கரோனா தொற்று காலத்தில் போதிய வியாபாரம் இல்லாமல் அந்தக் கடை மூடப்பட்டதால், மோகனசுந்தரம் உணவு விநியோக நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ஹோப்காலேஜ் பகுதி உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, புலியகுளம் சாலை நோக்கி மோகனசுந்தரம் சென்று கொண்டிருந்தார். பீளமேடு காவல் நிலையம் அருகே அவர் சென்றேபோது, அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வேன், அவிநாசி சாலையிலிருந்து பன்மால் சாலையை நோக்கி திரும்பியது. அப்போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியது.

இதைப் பார்த்த மோகனசுந்தரம், பள்ளி வேனை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் "ஏன் அலட்சியமாக வேனை ஓட்டுகிறீர்கள்" என கேட்டுள்ளார். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது. பன்மால் சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ், என்ன நடந்தது என விசாரிக்காமல், சம்பவ இடத்துக்கு வந்து, உணவு விநியோக ஊழியர் மோகனசுந்தரத்தின் செல்போனை பிடுங்கி, அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவலர் அடிப்பதை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டார்.

விசாரணையின் இறுதியில் காவலர் சதீஷ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மோகனசுந்தரம் பீளமேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவர் சதீஷ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ள போலீஸார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்துள்ளதுடன், காவலர் சதீஷை பணியிடை நீக்கம் செய்தும் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x