Published : 03 Jun 2022 04:01 PM
Last Updated : 03 Jun 2022 04:01 PM

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரியான சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித் அவர் கூறியது: "13 வேட்பாளர்களிடமிருந்து 18 வேட்புத் தாள்கள் பெறப்பட்டது. சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ஆகியோர் திமுக சார்பாக தலா இரண்டு வேட்புமனு அளித்திருந்தார். சி.வி.சண்முகம் அதிமுக சார்பில் ஒரு வேட்புமனு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் 3 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தர்மர் ஒரு வேட்புமனுவையும், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் திமுக சார்பில் இரண்டு வேட்பு மனுக்களை அளித்திருந்தார். சுயேச்சைகள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல்முருகன் சோழகனார் தலா ஒரு மனு அளித்திருந்தனர்.

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த 1.6.2022 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அளித்த வேட்பாளர்கள் எவரும் தங்களது வேட்புமனுக்களை இன்று (ஜூன் 3) 3 மணிக்குள் திரும்பபெறவில்லை.

இந்த தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6. போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை 6.இரண்டும் சமமாக உள்ளதால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 53/2- ன்படி, திமுகவைச் சேர்ந்த சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x