Published : 27 May 2016 12:59 PM
Last Updated : 27 May 2016 12:59 PM

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானி லை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26-ம் தேதி மழை பெய்துள்ளது. சாத்தூர், விருதுநகரில் தலா 50 மி.மீ., மானாமதுரை 30 மி.மீ., திருபுவனம் 20 மி.மீ., ஈரோடு 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பச் சலனத்தால் அடுத்த 2 நாட்களுக்கும் (சனி, ஞாயிறு) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன்கூடிய கோடை மழையோ பெய்யும்.

பருவமழை எப்போது?

மார்ச், ஏப்ரல், மே மாதத்துடன் கோடை காலம் முடிவடைய வேண்டும். ஜூன் மாதத்தில் இருந்து புதிய பருவகாலம் தொடங்கும். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு 4 விதமான கூறுகள் இருக்கின்றன. அதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை. அடுத்த 3 நாட்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் வழக்கத்தைவிட சனிக்கிழமை (இன்று) 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகம் இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு இருக்காது.

கடல்காற்றில் ஈரப்பதம் அதிகம்

சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் 12.30, பிற்பகல் 2.45, மாலை 5.30 மணிக்கு கடல்காற்று வீசத் தொடங்கியது. அவ்வாறு வீசும்போது ஈரப்பதம் அதிகம் இருந்தால் வியர்த்துக் கொட்டும். கடல்காற்று வீசும்போது கடற்கரையில் இருந்தால் குளிர்ச்சியாக இருக்கும். அந்த காற்றே அதிக ஈரப்பதத்துடன் ஊருக்குள் வீசும்போது வியர்த்துக் கொட்டி எரிச்சலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைவாசிகள் கடும் வெப்பத்தால் நேற்று அவதிப்பட் டனர். முடிந்தவரை வீட்டுக்குள் ளேயே முடங்கினர். அதேநேரம், கோடை விடுமுறை முடியும் நேரம் என்பதால், பள்ளிக்கூடங்களில் அதிக பெற்றோரை காணமுடிந் தது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, கல்விக் கட்டணம் செலுத் துவது போன்ற வேலைகளுக்காக, வெப்பத்தையும் பொருட்படுத் தாமல் பலரும் பள்ளிகளில் வரிசையில் காத்திருந்தனர்.

பழச்சாறு விற்பனை அமோகம்

கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று நிறைவடைகிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் முடியும்போது வெப்பத் தாக்குதல் படிப்படியாக குறையும் என்பார்கள். ஆனால், இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரம் முடியும் நிலையிலும், வெப்பத்தின் தாக்குதல் குறைந்தபாடில்லை.

இதனால், தர்பூசணி, கிர்னி பழம், முலாம் பழம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறு, இளநீர் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது. வாகனங்களில் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது, பல ஆண்களும் கையுறை அணிந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. குழந்தைகளுக்கு வியர்க்குரு, கொப்பளம், சின்னம்மை போன்ற வியாதிகள் வந்துவிடக்கூடாது என்பதால் தெருவில் போய் விளையாட குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்கவில்லை.

வெயில் சுட்டெரிப்பது குறித்து வங்கி ஊழியர் ஆர்.கல்பனா குணசேகரன் கூறியதாவது:

சுட்டெரிக்கும் வெயிலால் உடல் சோர்வு அதிகம் உள்ளது. தோல் நிறம் மாறுகிறது. நீர்க்கடுப்பு, தோல் கொப்புளம் ஏற்படுகிறது. காலையில் குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பிய உடனே உடல் வியர்த்து ஆடைகள் நனைந்துவிடுகின்றன. மாலை வரை ஈரத்துணியை அணிந்திருப்பது போல உள்ளது. தலை வியர்ப்பதால் முடியை பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. குறிப்பாக பொடுகு பிரச்சினை ஏற்படுகிறது. விசேஷ நிகழ்ச்சிகளுக்குகூட பட்டுப் புடவை அணிய முடியவில்லை. முடிந்த அளவுக்கு காட்டன் சுடிதார் போன்ற ஆடைகளையே அணிகிறோம்.

குடும்பத் தலைவி கே.வாசுகி கூறியதாவது: கோடை காலத்தில் பெண்களுக்கு பொதுவாக கண் எரிச்சல், வியர்வை காரணமாக தோல் வியாதிகள் ஏற்படுகிறது. முகத்தில் எண்ணெய் வடியும். இதனால் எவ்வளவு மேக்கப் போட்டாலும் முகம் மலர்ச்சியாக இல்லாமல் வாடியது போலவே இருக்கிறது. இதனால் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்வது சங்கடமாக உள்ளது. முடிந்தவரை வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ், கையுறை அணிந்து செல்கிறோம். ஹேண்ட்பேக்கில் டிஷ்யூ பேப்பர், சன் கிரீம் எடுத்துச் செல்கிறேன். முடிந்த அளவுக்கு காட்டன் ஆடைகளை அணிகிறேன். உடல் சூட்டைத் தணிக்க தினமும் 2 முறை குளிப்பதோடு நார்ச்சத்து அதிகம் உள்ள பழச்சாறுகளை அருந்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x