Last Updated : 27 May, 2022 06:14 AM

 

Published : 27 May 2022 06:14 AM
Last Updated : 27 May 2022 06:14 AM

சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தோருக்கு பொருள் வழங்க மறுப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் வெளியூர்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் ஒரே இந்தியா, ஒரு ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர், எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத் தப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகை பதிவுக்குப் பிறகு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதனால் வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர் களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் சிவகங்கை மாவட் டத்தில் பல ரேஷன் கடைகளில் வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: அந்தந்த ரேஷன் கடைகளுக்குட்பட்ட கார்டுதாரர்கள் அடிப்படையில்தான் பொருட்கள் ஒதுக்கீடு செய்கின்றனர்.

ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில் ஓரளவு பொருட்களின் இருப்புஇருக்கும். அதனால் வெளி கார்டுதாரர்களுக்கு வழங்க முடியும். அதுவும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்றவை மட்டும் வழங்க முடியும், துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் குறைவாக வருவதால் அவற்றை வழங்க முடியாது. கார்டுகள் குறைவாக உள்ள கடைகளில் வெளி கார்டுதாரர்களுக்கு வழங்கினால், உள்ளூர் கார்டுதாரர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு கடைகளுக்கும் ஒதுக்கீட்டைவிட கூடுதலாக பொருட்களை அனுப்பினால் மட்டும் வெளி கார்டுகளுக்கு வழங்க முடியும், என்றனர்.

இதுகுறித்து வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்க தொடர்ந்து ஊழியர்களை வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் அதற்கேற்ப பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x