Last Updated : 26 May, 2022 06:12 AM

 

Published : 26 May 2022 06:12 AM
Last Updated : 26 May 2022 06:12 AM

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டைப் போன்று கொல்லிமலையில் கோடை விழா நடத்த வேண்டும்: சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் கொல்லிமலையிலும் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களில் கொல்லிமலைக்கு சிறப்பிடம் உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதே இதற்கு காரணமாகும். நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலைக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொல்லிமலையில் காண்பதற்கு அரிதான பல்வேறு இடங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கது ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகும். சுமார் 160 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை, கீழிருந்து பார்க்கும்போது ஆகாயத்தைப் பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 1,050 படிக்கட்டுகள் இறங்கிச் செல்ல வேண்டும்.

இந்த அருவிக்கு செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள சிறிய அருவி மற்றும் மலையின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்கின்றனர்.

இதுபோல் மலையில் தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை என பல இடங்கள் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மலையின் அடிவாரம் தொடங்கி உச்சி வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகத்தில் அதிக கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது கொல்லிமலை. பல்வேறு சிறப்புகள் இருந்தபோதும் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போல் கோடை விழா நடத்தப்படுவதில்லை, என்ற ஏக்கம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. கோடை விழா நடத்தினால் மலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், மலையின் சிறப்புகள் மேலும் பலரை சென்றடைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் வணிக ரீதியாக உயரும்.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த ஓரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு சார்பில் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் மட்டுமே வருகின்றனர். அதேவேளையில் கோடை காலத்தில் கோடை விழா நடத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவர் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் கொல்லிமலை மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தனின் சொந்த மாவட்டம் என்பதால் கொல்லிமலையில் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவை மிகுந்த ‘நமரன்’ ரக வாழை

கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு காபி, மிளகு, பலா மற்றும் மரவள்ளி, வாழை, அண்ணாசி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழை ‘நமரன்’ ரகம் என அழைக்கப்படுகிறது. இந்த ரக வாழை கொல்லிமலையில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. சுவை மிகுந்த இந்தப் பழத்தை மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்ல தவறுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x