Published : 20 May 2022 06:00 AM
Last Updated : 20 May 2022 06:00 AM

தமிழக - ஆந்திர எல்லையில் பெய்து வரும் கோடை மழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் கனமழையால், விரிஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோடை காலத்தில் பாலாற்றில் 660 கன அடி அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 3 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தமிழக -ஆந்திர எல்லையில் பரந்து விரிந்துள்ள கவுன்டன்யா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் 31 கன அடி அளவுக்கு கவுன்டன்யா ஆற்றில் வெளியேறி வருகிறது. வெள்ள நீர் குடியாத்தம் நகர தரைப்பாலத்துக்கு மேலாக நேற்று காலை கடந்து சென்றது.

ஏற்கெனவே சேதமடைந்த தரைப்பாலம் என்பதால் போக்கு வரத்துக்காக தற்காலிகமாக சீரமைத்தனர். நேற்றைய வெள் ளத்தால் தரைப்பாலம் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், காமராஜர் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அங்குள்ள திருவிழா கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெள்ள நீரை மாற்றுப்பாதையில் திருப்பி தரைப்பாலத்தை மீண்டும் தற்காலிகமாக சீரமைத்தனர். தரைப்பாலத்தில் நேற்று மாலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

கோடையில் பாலாற்று வெள்ளம்

கோடை காலத்தில் எப்போதும் வறண்டு காணப்படும் பாலாற்றில்வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. விரிஞ்சி புரம் தரைப்பாலத்தின் வழியாக ஆர்ப்பரித்துச் செல்லும் பாலாற்றின் கோடை வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கோடை வெள்ளத்தை விவவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தொடர் மழையின் காரணமாக பொன்னை ஆற்றைத் தவிர்த்து மற்ற பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் பாலாற்றில் நேற்றைய நிலவரப்படி 660 கன அடி வெள்ள நீர் சென்றது. கவுன்டன்யா ஆற்றில் 31 கன அடி நீர் வரும் நிலையில், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பெய்த கன மழையால் அகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 340 கன அடி அளவுக்கு வெட்டுவானம் அருகே பாலாற்றில் கலந்தது. அதேபோல், ஆந்திர வனப்பகுதியில் பெய்த மழையால் புல்லூர் தடுப்பணையை கடந்து 170 கன அடிக்கு வெள்ள நீர் தமிழக பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x