Published : 19 May 2022 06:40 AM
Last Updated : 19 May 2022 06:40 AM

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய போட்டியில் இரு பதக்கம் வென்ற சேலம் கல்லூரி மாணவி

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய தடகளப் போட்டியில் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி ஜோதி, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி- வசந்தா தம்பதியின் மகள் ஜோதி (20). மாற்றுத்திறனாளியான இவர் சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஏ (பொருளாதாரம்) மூன்றாமாண்டு பயின்று வருகிறார். நாகர்கோவிலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில தடகளப்போட்டியில், ஓட்டம், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

தொடர்ந்து, இவர் டெல்லியில் நடந்த தேசிய தடகளப் போட்டியில், 400 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, அவர் சர்வதேச தடகளப் போட்டிக்கான பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்.

சாதனை படைத்த மாணவி ஜோதியை, சேலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ரமா, பயிற்சியாளர்கள் சித்து, கவுதம், உடற்கல்வி இயக்குநர் சிவகுமார், உதவி இயக்குநர் சுவர்ணாம்பிகை, பேராசிரியைகள் பூங்கோதை, மங்கையர்க்கரசி, கோமதி, கீதா உள்ளிட்டோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x