Published : 18 May 2022 07:40 AM
Last Updated : 18 May 2022 07:40 AM

மாநிலங்களவை எம்.பி.யாக ப.சிதம்பரம் தேர்வாக வாய்ப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரம் போட்டியிட அதிக வாய்ப்புஉள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவ னில்தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு கண்டனம்

பின்னர், செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் சிபிஐ சோதனையிடுவது பழிவாங்கும் நடவடிக்கை. பொது வாழ்வில் ப.சிதம்பரத்தை போன்று நேர்மை, நாணயமிக்க அரசியல்வாதிகளை தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். அவருடைய காலத்தில் இந்த தேசத் துக்காக அதிகமாக உழைத்திருக் கிறார்.

பொருளாதார சிந்தனைகள் அவரிடம் இருந்து வந்தவைதான். மன்மோகன் சிங்கும், அவரும் சேர்ந்துதான் இந்தியாவின் வறுமையை ஒழிப்பதில் மிகப் பெரிய பங்கு வகித்தார்கள். கிராமப் புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் என்பது அவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டம் அவர் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

அவரது புகழை, பெருமையை குலைக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசாங்கம் கீழ்த்தரமான வேலையை செய்கிறது. எத்தனை முறை அவரது வீட்டில் சோதனையிடுவீர்கள். என்ன சோதனை செய்தோம், என்ன கிடைத்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன என்று சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல். எனவே, மத்திய அரசை நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். இது ஒரு நேர்மையற்ற செயல்.

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக ஆளுநர் கொண்டு வர வேண்டாம். இங்கு தமிழ் உயிர் வாழ்வதற்கு எங்களுக்கு வழிவிட்டாலே போதும். சிதைப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்க வேண்டாம் என்பது தான் எங்களது வேண்டுகோள்.

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காக நான் யாருக்கும் கோரிக்கை வைக்கவில்லை. ப.சிதம்பரத்துக்கு அந்த பதவியை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x