Published : 17 May 2022 05:16 AM
Last Updated : 17 May 2022 05:16 AM

காஞ்சி வரதராஜர் கோயில் வேத பாராயணம்: பழைய நிலையே தொடர உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வேத பாராயணம் செய்வதில் அறநிலையத் துறை கடந்த மே 14-ல் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக ஏற்கெனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் போது வடகலைப் பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கடந்த மே 14-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதி வழங்கியிருப்பது சட்ட விரோதமானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். வடகலை பிரிவினருக்கு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் அன்றாடம் பிரச்சினை ஏற்படுவதால் பக்தர்கள் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதை ஒழுங்குபடுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதி அளித்திருப்பது பாரபட்சமானது. எனவே இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை கடந்த மே 14-ல் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக உள்ள பழைய நிலையே தொடர வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x